சாலை விபத்தில் ஓட்டுநர் பலி. லாரி மீது வழக்குப் பதியக்கோரி காவல் நிலையம் முற்றுகை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 September 2023

சாலை விபத்தில் ஓட்டுநர் பலி. லாரி மீது வழக்குப் பதியக்கோரி காவல் நிலையம் முற்றுகை.


பேர்ணாம்பட்டு அருகே லாரி மோதி டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதியக்கோரி இறந்தவரின் உறவினர்கள் காவல்  நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பேர்ணாம்பட்டு நகரம், புது ஷாப் லைன் பகுதியைச் சேர்ந்தவர் டிராக்டர் ஓட்டுநர் தமிழரசன்(40). இவரது மனைவி செந்தமிழ்க்குமாரி. இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். புதன்கிழமை இரவு தமிழரசன் இருசக்கர வாகனத்தில் வி.கோட்டா சாலையில் சென்றாராம். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னை சென்ற லாரி இவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. 

இதில் பலத்த காயமடைந்த தமிழரசன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். லாரி காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது. லாரியை போலீஸார் விடுவித்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தமிழரசன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

போலீஸார் லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதியாமல் லாரியை விடுவித்ததைக் கண்டித்தும், உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் தமிழரசனின் உறவினர்கள் வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமரசம் செய்தனர். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad