வேலூர் பாலாற்றங்கரையில் வெகு விமரிசையாக மாசி மக மயான கொள்ளை தேர் திருவிழா நடந்தது. இதில் விருதம்பட்டு பகுதி சார்ந்த தேர் சரிந்து கீழே விழுந்ததில் அந்த இடிபாடுகளில் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து நடந்த வாக்குவாதத்தில் இருவருக்கு கத்தி குத்து விழுந்தது.
வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. விருதம்பட்டு, கழிஞ்சூர் மோட்டூர், ஆகிய பகுதிகளைச் சார்ந்த தேர்கள் வந்து சூறையாடல்கள் முடிந்து மூன்று தேர்களும் திரும்பும் நிலையில் மோட்டூர் வெண்மணி பகுதியைச் சேர்ந்த தேர் திரும்பும் போது எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இதில் விமல்ராஜ்(வயது 30) என்பவர் சிக்கிக்கொண்டு படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். லேசான காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாலாற்றில் டிராக்டர் மூலமாக தேர் திரும்பும் போது மணல் மற்றும் அங்கு செய்யப்பட்டிருந்த உருவ பொம்மைகளில் தேர்சிக்கி நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்ததாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி விருதம்பட்டு பகுதியில் இருந்து வேலூர் பாலாற்றுக்கு தேர் வரும்போது ஒரு தேரின் முன்னால் சில இளைஞர்கள் நின்று கொண்டு பெண்களுக்கு இடையூறாக நடனமாடியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த இளைஞர் கார்த்தி அவர்களை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்களில் ஒருவர் திடீரென கத்தி மற்றும் பிளேடால் இருவரையும் குத்தி கிழித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் படுகாயம் அடைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மயான கொள்ளை திருவிழாவில் தேர் கவிழ்ந்த சம்பவம் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்கியராஜ்


No comments:
Post a Comment