வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கீழ்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை( வயது 51). இவர் டாக்டருக்கு படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் சார்பில் புகார் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பேரில் வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பாலச்சந்தர் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் மாறன் பாபு தலைமையில் மருந்தாளுனர் லலித்குமார், மேல்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குப்பன் ஆகியோர் ஏழுமலை வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர்.
மேலும் நடந்த விசாரணையில் அவர் செவிலியர் உதவியாளருக்கு படித்து விட்டு தனது வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு ஊசி போட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவரது கிளினிக்கில் இருந்த ஊசிகள், மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மேல்பட்டி காவல் நிலையத்தில் மருத்துவ அலுவலர் டாக்டர் மாறன் பாபு கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் குப்பன் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் ஏழுமலையை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment